×

குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் பலி: ஆவடி அருகே சோகம்

ஆவடி: ஆவடி அடுத்த பொத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகள் காயத்ரி(15). இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரது மகள் ரதிமீனா(13). இவர்கள் இருவரும் செங்குன்றம் லெட்சுமிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு, 7ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை காயத்ரி, ரதிமீனா இருவரும் வீட்டில் இருந்து அவர்களுக்கு சொந்தமான வயல்வெளிக்கு சென்றனர். பின்னர், அவர்கள் இருவரும் வயலில் கீரை, வெண்டைக்காய் பறித்தனர். பிறகு, அவர்கள் அதே பகுதி பொன்னியம்மன் கோயில் அருகில் உள்ள தண்ணீர் தேங்கிய குட்டையில்  இறங்கி கை, கால்களை கழுவினர். அப்போது, திடீரென அவர்கள் இருவரும் குட்டையில் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி மூழ்கினர்.

இதனையடுத்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குட்டையில் இருந்து காயத்ரி, ரதிமீனா இருவரையும் மீட்டனர். பின்னர், பொதுமக்கள் அவர்களை சிகிச்சைக்காக கொள்ளுமேட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரதிமீனா வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். மேலும், முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, காயத்ரியை ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரியும் பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து, தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் இரு மருத்துவமனைகளுக்கு வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : girls ,Avadi , 2 girls drowned in puddle: Tragedy near Avadi
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்