தேனி: தேனி மாவட்ட விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைப்பதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டம் முழுவதும் மேற்குத்தொடர்ச்சி மலை சூழ்ந்த பகுதியாகும். இந்தாண்டு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே பெய்தது. வடகிழக்கு பருவமழையும் குறித்த நேரத்தில் துவங்கவில்லை. நேற்று இரவு மட்டும் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. தற்போது வரை மாவட்டத்தில் எந்த அணைகளும், கண்மாய்களும் முழுமையாக நிரம்பும் அளவிற்கு மழை பெய்யவில்லை. மேலும் மாவட்டத்தில் சின்னமனுார், ஆண்டிபட்டி, போடி ஒன்றியங்களில் பெரும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து கருமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒன்றியங்களில் விவசாய நிலங்கள் அதிகம். தண்ணீர் குறைவாக உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் சொட்டுநீர் பாசன அமைப்புகளை அமைத்து வருகின்றனர். இதற்கு தேவையான அரசு மானிய உதவிகளை தோட்டக்கலைத்துறையும், வேளாண்மைத்துறையும் செய்து வருகின்றன. விவசாயிகளின் தகுதிக்கேற்ப சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் முதல் 75 சவீதம் வரை அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பெருமளவு சொட்டுநீர் பாசனம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.