டெல்லி: ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசி மூலம் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெங்காயம் விலை அதிகரித்து வரும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடகாவில் பெய்த கனமழையால் வெங்காயம் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விலை படிப்படியாக உயர்ந்து கொண்டு வந்தது. குஜராத் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது விலை 100-ஐ தாணடியுள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வணிகர்கள் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்திருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக மத்திய அரசு நிறுவனமான எம்.எம்.டி.சி. மூலம் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து வேறு எங்கு வெங்காயம் சரியான விலையில் கிடைக்கிறதோ, அங்கு இருந்து இறக்குமதி செய்யலாம். இதன் மூலமாக இந்திய சந்தையில் வெங்காய வரத்து அதிகரிக்கும், இதனால் விலை குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.