×

பீகாரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு ஓட்டு இயந்திரத்தை தூக்கினால் துப்பாக்கியால் சுடுங்கள் : தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு

பாட்னா,:பீகாரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடியில் ஓட்டு இயந்திரத்தை தூக்கினால் துப்பாக்கியால் சுடுவதற்கு தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா ெதாற்று பரவலுக்கு மத்தியில் பீகார் மாநிலத்தில் முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை (அக். 28) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இத்தொகுதிகளுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது. இந்த முதல் கட்ட தேர்தலில் 1,064 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் 35 சதவிகிதம் பேர் இளைஞர்கள் ஆவர். முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரா தொகுதியில் இறுதிக்கட்டப் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் நிதிஷ்குமார், அரசியல் அனுபவம் இல்லாத சிலர் தன்னை விமர்சித்து வருவதாக தேஜஸ்வி யாதவை மறைமுகமாக சாடினார். இதனிடையே வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயாக உயர்ந்துள்ளது குறித்து, பாஜகவினர் அமைதி காப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார். பீகாரில் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாகவும் தேஜஸ்வி புகார் கூறினார்.

பாஜகவினர் சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் போஸ்டர்களில், நிதிஷ் குமார் படம் தவிர்க்கப்பட்டு மோடியின் படம் மட்டும் பிரமாண்டமாக இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு கட்சிகளும் அவரவர் தலைவர்களை முன்னிலைப்படுத்தி தனியாக போஸ்டர்கள் வெளியிட்டிருப்பது, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கைமூர் மாவட்ட கலெக்டர் கிஷோர் சவுத்ரி வெளியிட்ட அறிவிப்பில், ‘முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் அமைதியான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தினாலோ, உடைத்தாலோ சம்பந்தப்பட்ட நபர்களை போலீசில் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இருந்தும் கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்றார்.

Tags : Bihar ,Election , Bihar, Polling, Electoral Officer, Order
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு