×

செங்கல்பட்டு மாவட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்வோருக்கு ஊக்கத்தொகை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. இயற்கை முறையில் வெண்டை, கத்தரி, தக்காளி ஆகியவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.3,750 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் அதிகபட்சமாக தலா விவசாயி 2 ஹெக்டர் வரை ஊக்கத்தொகை பெறலாம். ஏற்கனவே இயற்கை முறையில் சாகுபடி செய்தாலும், புதிதாக இயற்கை விவசாயம் செய்பவராக இருந்தாலும் அங்ககச் சான்று பெற ரூ.500 வழங்கப்படும்.
இந்தாண்டு, 133 ஹெக்டர் காய்கறி சாகுபடி பரப்பளவை இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமுள்ள 400 விவசாயிகளுக்கு, இயற்கை விவசாய சாகுபடி சான்றிதழ் பெற ரூ.500/- வழங்கப்படும். விவசாயிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இயற்கை விவசாயம் செய்யலாம்.

இதில் பயன்பெற விரும்புவோர், செய்த விதை, நடவுச் செடிகளின் பட்டியல், கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற அடங்கல் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட வயலின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை தோட்டக்கலை துறையின் நுண்ணீர் பாசன வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அத்தகைய வசதி இல்லாத விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அச்சிறுபாக்கம், சித்தாமூர், பவுஞ்சூர் (9600224217), சிட்லபாக்கம், காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம் (9940227622), திருக்கழுக்குன்றம், திருப்போரூர் (9789899343) ஆகிய எண்களில்  தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Chengalpattu ,district , Incentives for natural farmers in Chengalpattu district
× RELATED தேர்தல் பற்றாளர்கள் ஆய்வு கூட்டம்