×

OBC-க்கு 50% இட ஒதுக்கீடு விவகாரம்: அரசியல் ரீதியாக பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும்...மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி சமூகநீதி மீது தாக்குதலை நடத்துகின்றது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவப் படிப்புகளில் அகில  இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என  தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில், இடைக்கால நிவாரணம் கோரிய இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று இரண்டே வரிகளில் தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அகில இந்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வி இடங்களில் இந்த ஆண்டே 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட பட்டியலின் மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தில் இந்த ஆண்டு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என பாஜக அரசு எடுத்து வைத்த வாதத்தாலும் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனாதாலும் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களாக 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.

நால்வர் கமிட்டிக் கூட்டத்தில் 69% இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான அறிக்கை கேட்கப்பட்டும்-கடைசி வரை கொடுக்காமல் இழுத்தடித்து சமூக அநீதிக்கு துணை போனது முதலமைச்சர் பழனிசாமி அரசு. மத்திய பாஜக அரசும்-அதிமுக அரசும் கூட்டணி வைத்து இட ஒதுக்கீடு உரிமை மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. 27% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்தி பிறகு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 50% இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.

இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாக பிரதமருக்கு கொடுக்க வேண்டும்; இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும்  முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags : Palanisamy ,MK Stalin , 50% reservation issue for OBC: Chief Minister Palanisamy should put pressure on the Prime Minister politically ... MK Stalin's statement !!!
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...