சென்னை: சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையை திறந்து வைத்து விழாவில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நோய் நாடி, நோய் முதல்நாடி என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பேசினார். நலமான மாநிலமே, வளமான மாநிலமாக திகழும். தமிழகத்தில் பல முன்னோடி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.
முதலமைச்சர் மருத்து காப்பீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18,000 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் திகழ்கிறது. அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதால் இந்திய அளவில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
கிண்டியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை தரம் உயர்த்தும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் 5 ஆண்டுகளாக தொடர்ந்து மத்திய அரசின் விருதுகளை பெற்று வருகிறது. தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் அதிகளவிலான பிரவசங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது.