சிவகிரி: சிவகிரி அருகே மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர். தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் கோம்பையாறு மேல் பகுதியில் ஏலத்திரி சரகத்திற்குட்பட்ட பகுதியில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவகிரி ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனவர் முருகன், பயிற்சி ரேஞ்சர் பூவேந்தன், வனக்காப்பாளர்கள் திருவேட்டை,
இம்மானுவேல், சுதாகர், ராஜூ, வனக்காவலர் அருண்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆனந்தன், மாரியப்பன், பாலசுப்பிரமணியன் உட்பட 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், பொதிகை வனக்குழுவினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெரும் போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. கோரைப்புல் மற்றும் காய்ந்த இலைகள் தீப்பிடித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.