பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் காவிரி பாலத்தில் சென்ற லாரியில் இருந்து கொட்டிய கழிவு எண்ணெயால், அவ்வழியாக சென்ற டூவீலர்கள் வழுக்கி விழுந்தன. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தின் வழியாக, நேற்று மதியம் சென்ற லாரியில் இருந்து கழிவு எண்ணெய் கீழே கொட்டியது. பழைய காவிரி பாலம் முழுவதும் எண்ணெய் பரவியதால், அவ்வழியாக டூவீலரில் சென்ற இருவர் கீழே விழுந்து அடிபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார், கனரக வாகனங்கள் சென்றால் ஆயிலில் வழுக்கி, பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் என கருதி, உடனடியாக பழைய பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினர்.
பின்னர் வெப்படையில் இருந்து தீயணைப்பு படையினரை வரவழைத்தனர். அவர்கள் கழிவு எண்ணெய் கொட்டிய சாலையில் மண்ணை கொட்டி பரப்பினர். பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். இதனால் பழைய பாலத்தின் வழியாக 2 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.