×

கொரோனாவால் உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு பணி கோரி வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த  செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக்கோரிய விண்ணப்பத்தை  4 வாரங்களில்  பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்  செவிலியராக பணியாற்றியவர் தங்கலட்சுமி. கொரோனா சிகிச்சை பணியில் முன் களப்பணியாளராக ஈடுபட்ட அவர்,  கடந்த ஜூன் மாதம் கொரோனா  பாதித்து உயிரிழந்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால் 50 லட்சம் இழப்பீடும்,  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.அதன் அடிப்படையில், தனது மகளுக்கு அரசு  வேலை வழங்கக் கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஏற்கனவே காப்பீட்டு நிறுவனம் மூலம் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்று விட்டோம். வேலையில்லாமல் உள்ள எனது இளைய  மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அரசு அறிவித்துள்ளபடி  எனது மகளுக்கு  அரசுப் பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனுதாரரின்  கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின்  விண்ணப்பத்தை 4 வாரங்களில்  பரிசீலித்து முடிவு எடுக்குமாறு  தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : Govt ,nurse ,Corona , Govt seeks job for nurse's daughter killed by Corona
× RELATED வாக்கு எண்ணிக்கை மையமான அரசு...