புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த முனியாண்டி மகன் பாலச்சந்தர் (37). புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள இவருக்கு, தஞ்சையில் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பாலச்சந்தர் தனது வீட்டுக்கு அருகேயுள்ள தோட்டத்தில் இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள்களால் அவரை சரமாரியாக வெட்டினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பி ஓடிவிட்டது. பாலச்சந்தரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பாலச்சந்தர் உயிரிழந்தார். தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சென்று விசாரித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.