புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்தை தாண்டியது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 53,370 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78 லட்சத்து 14 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 650 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 956 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 70 லட்சத்து 16 ஆயிரத்து 46 பேர் வைரஸ் தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். 6 லட்சத்து 80 ஆயிரத்து 680 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் விகிதம் 89.78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போல், இறப்பு விகிதம் 1.51 சதவீதமாக சரிந்துள்ளது. மொத்த பாதிப்பில் 8.71 சதவீதத்தினர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.