திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் காலையிலும், இரவிலும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். நேற்றிரவு அஸ்வ (குதிரை) வாகனத்தில் கல்கி அவதாரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை ஏழுமலையான் கோயிலில் உள்ள ஐயன மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு துளசி மாலை அணிவித்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் ஐயன மண்டபம் வெளியே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.
வழக்கமாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடத்தப்படும். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக கோயில் திருக்கல்யாண மண்டபம் பகுதியில் தொட்டி அமைக்கப்பட்டு எளிமையான முறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதுகுறித்து தேவஸ்தான அர்ச்சகர்கள் கூறுகையில், ‘வரலாற்றில் முதன்முறையாக 2 பிரம்மோற்சவங்களும் வீதியுலா இன்றியும், தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடத்தாமலும், பக்தர்கள் இன்றியும் நடந்து முடிந்துள்ளது. விரைவில் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து, மக்கள் அனைவருக்கும் அதனை விநியோகித்து தொற்று பயத்தில் இருந்து நாம் அனைவரும் நீங்கி அடுத்த பிரம்மோற்சவத்தின்போது பாரம்பரிய கோலாகலத்துடன் கொண்டாட சுவாமி அருள்புரியவேண்டும்’ என தெரிவித்தனர்.