குமரி: வெளிநாட்டில் உள்ள கணவருடன் வீடியோ காலில் பேசியவாறு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்தவர் செல்வராஜ் (36). இவர் ஓமன் நாட்டில் உள்ள எண்ணெய் கம்பெனி ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆக்னஸ் நந்தா (31). இவர்களுக்கு திருமணமாகி ஐந்தரை ஆண்டுகள் ஆகின்றன. நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் இருப்பதால், தனது பெற்றோர் வீட்டில் ஆக்னஸ் நந்தா, தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக போனில் பேசும் போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினமும் கணவருடன், நீண்டநேரம் வீடியோ காலில் தகராறு நடந்துள்ளது. இந்த தகராறின்போது வீடியோ காலில் பேசிக் கொண்டு இருக்கும்போதே, திடீரென தனது கையில் இருந்த பூச்சி மருந்து பாட்டிலை திறந்து குடித்த ஆக்னஸ் நந்தா, கணவருக்கு பை.. பை... என சொல்லியவாறு போன் இணைப்பை துண்டித்தார். மனைவி விஷம் குடிப்பதை வீடியோவில் பார்த்த செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பதறி போன அவர்கள் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆக்னஸ் நந்தா உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதையடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆக்னஸ் நந்தா உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.