குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் கரூர் அடுத்து இரண்டாம் நிலை ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தில் தினந்தோறும் காலை முதல் மாலை வரை விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் இரு மார்க்கத்திலும் வந்து செல்கின்றன. மேலும் சரக்கு ரயில்களும் செல்கிறது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் குளித்தலை ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
மேலும் கரூர் டெக்ஸ் நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.தற்போது கொரோனா காலமென்பதால் கடந்த 8 மாத காலமாக பயணிகள் இன்றி ரயில் நிலையம் வெறிச்சோடி உள்ளது. இந்நிலையில் ரயில் நிலைய நுழைவு வாயிலில் பழமை வாய்ந்த மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதி பட்டுப்போய் கிளைகள் வலுவிழந்து காணப்படுவதால் எந்த நேரமும் விழும் அபாய நிலை உள்ளது. தற்போது மழை காலம் வருவதால் ஈரப்பதம் அதிகமாகி வலுவிழந்த மரம் விழும் அபாய நிலையில் உள்ளது.
இவ்வழியாக தினந்தோறும் ஏராளமானோர் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் கடந்து செல்கின்றனர். அப்போது மரம் சாய்ந்தால் கிளைகள் ஓடிந்தாலும் சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அச்சத்தை உருவாக்கி வருகிறது. அதனால் சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் குளித்தலை ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள பழமைவாய்ந்த பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.