சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது. ஒடிசா அருகே நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் - வங்கதேதம் இடையே கரையை கடக்க உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தி்ல் வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் கடலோர தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.