சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பொதுப்பணிகளில் அடங்கிய சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையில் உள்ள உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (2018-2019ம் ஆண்டுக்கானது), தமிழ்நாடு மருத்துவ பணியில் அடங்கிய மருத்துவ ஆய்வாளர் மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் அடங்கிய இளநிலை பகுப்பாய்வாளர் ஆகிய பதவிகளுக்கான முறையை முதற்கட்ட மற்றும் நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 28ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி மாலை 5.30 மணி வரை, அரசு வேலை நாட்களில் தங்களது மூலச்சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இசேவை மையங்கள் மூலமாக ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவ்விண்ணப்பதாரர்களுக்கு இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை என கருதி, அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த குறிப்பானை மற்றும் அரசு இசேவை மையங்களின் பட்டியல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.