×

கோயில்கள் திறந்தும் திருவிழா நடைபெறவில்லை: பட்டினியால் பரிதவிக்கும் ராட்டின தொழிலாளர்கள்

விழுப்புரம்: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. பல லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்தனர். தற்போது 6 மாதங்களை கடந்துள்ள நிலையிலும், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. குறிப்பாக, தொழில் நிறுவனங்கள், பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதேசமயம், சிறு, குறு தொழில்கள், குடிசைத்தொழில்கள் புத்துயிர் பெறவில்லை.

குறிப்பாக, தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்பட்ட பின்னரும், பல்வேறு நிபந்தனைகள் நீடிப்பதால் கோயில் விழாக்களை நம்பியுள்ள பல ஆயிரம் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, கோயில் திருவிழாக்களில் முக்கிய இடம்பெற்றிருப்பது ராட்டினம். சிறுவர், சிறுமிகளின் உள்ளம் கவர்ந்த விளையாட்டுகளில் ராட்டினம் சுற்றுவதும் ஒன்று. திருவிழாக்கள், பண்டிகை நாட்கள், கோயில், தர்கா, கிறிஸ்தவ ஆலய விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் ராட்டினம் சுற்றும் பழக்கம் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் அதிகமாக உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ராட்டினத்தை நம்பியே பிழைப்பு நடத்தும் குடும்பங்கள் ஏராளம் உள்ளன. முக்கியமான திருவிழாக்களுக்கு ராட்டினங்களை லாரியில் பிரித்து ஏற்றி திருவிழா நடைபெறும் இடங்களில் உரிய அனுமதி பெற்றோ அல்லது ஏலத்தில் எடுத்தோ ராட்டினம் போடுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுற்றுகின்ற வகையில் ராட்டினங்கள் உள்ளன.

இவர்கள் வருடம் முழுவதும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள், கோடைகால பள்ளி விடுமுறை நாட்களில் ஒவ்வொரு நகரமாக இடம்பெயர்ந்து ராட்டினத்தை கொண்டுசென்று சுற்றி பிழைப்பு நடத்துவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ராட்டின தொழில் முற்றிலும் முடங்கி போயுள்ளது. பல்வேறு பணிகளுக்கு ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் ராட்டின தொழிலுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஏனெனில் ராட்டினம் சுற்றுவதில் பெரும்பாலும் சிறுவர், சிறுமிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாலும், ராட்டினம் சுற்றுதலில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர்வது என்பது மிகவும் கடினம் என்பதாலும் இன்னும் இந்த தொழிலுக்கு அரசால் அனுமதி அளிக்கப்படவில்லை.

ஊரடங்கினால் 5 மாதங்களுக்கும் மேலாக பூட்டிக்கிடந்த வழிபாட்டு தலங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் வழிபாட்டு தலங்களில் தினந்தோறும் வழக்கமாக நடைபெறும் வழிபாடு சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ராட்டின தொழிலுக்கு இன்னும் அரசால் அனுமதி வழங்கப்படாததால் அந்த தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போதிய வருவாய் இல்லாத நிலையில் ராட்டின தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் மிகுந்த ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சில குடும்பத்தினர் ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் ராட்டின தொழிலாளர்கள் ஆங்காங்கே ராட்டினங்களை அப்படியே போட்டுவிட்டு ஊருக்கு வந்துவிட்ட நிலையில் அவர்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கைசெலவிற்கு கூட பணம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு ராட்டின தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் விரைவில் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதிவழங்கிடவேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : festival ,temples ,wheel workers , Wheel workers
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு