×

பண்ணாரி அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்; மனநிலை பாதித்தவரிடம் சென்றதால் பரபரப்பு

சத்தியமங்கலம்: பண்ணாரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்து நின்றன. அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் யானைகள் அருகே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

நேற்று மாலை பண்ணாரி அம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையோர வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறிய காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சாலையில் நடமாடின. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. அப்பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது தோளில் ஒரு நாயை வைத்துக் கொண்டு யானையை கண்டு சிறிதும் அஞ்சாமல் நின்று கொண்டிருந்தார்.

அப்போது 3 காட்டு யானைகள் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அருகே வந்தன. அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சிறிது தூரம் தப்பியோடி உயிர் தப்பினார். இந்த காட்சியை வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வாகன ஓட்டி வீடியோ எடுக்கும்போது, ‘‘பண்ணாரி தாயே மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்று...’’ என வேண்டியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : victim ,Pannari , Wild elephants
× RELATED ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயிலில்...