சென்னை: பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தொடங்கியுள்ள பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகளில் கொரோனா காலத்தை பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று தொடங்கி வைக்கப்பட்ட பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகளில், தற்போது பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.45-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் மொத்த 79 இடங்களில் பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள் தமிழக அரசால் திறக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தை மற்றும் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் அதிகபட்சமாக ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகளில் ரூ.45-க்கு பெரிய வெங்காயம் கிடைப்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர்.
சென்னையில் உள்ள பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகளில் ஒரு நபருக்கு 2 கிலோ பெரிய வெங்காயம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகளில் நேற்று மட்டும் 5,900 கிலோ பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் வெங்காயம் இருப்பு அதிக அளவில் இருக்க வேண்டும் என்றும், நல்லத்தரத்தில் இருக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.