×

விழலுக்கு இறைத்த நீர் போல, விவசாயிகளின் உழைப்பு வீணாவது வேதனையளிக்கிறது : சரத்குமார் அறிக்கை

சென்னை : தமிழகத்தில் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது வேதனையளிக்கிறது என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசனப் பகுதிகளுக்கு தேவையான நீர் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு விளைச்சல் அதிகரித்த போதிலும், அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதில் தாமதம் ஏற்படுவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் சார்ந்த டெல்டா விவசாயிகள் வேதனையில் வாடியுள்ளனர். ஒரு பருக்கை சோற்றையும் கீழே சிந்தாமல் சாப்பிடும் பண்பாடு கொண்ட தமிழகத்தில்,நூற்றுக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதால், விவசாயிகளின் உழைப்புவிழலுக்கு இறைத்த நீர் போல பயனற்று போனது வேதனையளிக்கிறது.

வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன் அறுவடையும், கொள்முதலும் நிறைவுபடுத்த வேண்டும் என்ற சூழலில், அறுவடை செய்த நெல்மணிகளை விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற பின்னர் நெல்மணிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான சூழல் இல்லை என வாங்க மறுப்பதில் நியாயமில்லை. தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாற்று வழியினை கண்டறிந்து, நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேக்கம் அடையாதவாறு விரைந்து நெல்லை கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, அறுவடை முடிந்த நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்காக நடமாடும் கொள்முதல் நிலையம் அமைத்து தினமும் காலை முதல் இரவு வரை 1500 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யலாம். தற்போது 17% ஈரப்பதம் கொண்ட நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதில் விதிகளை தளர்த்தி, 22 முதல் 24 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்மூட்டைகளையும் கொள்முதல் செய்யலாம்.விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளில் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக உருவாக்குவதுடன் தரமான தார்ப்பாய்களும், சாக்குப்பைகளும் தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற சூழலை தவிர்க்கலாம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : peasants ,well ,Sarathkumar , Farmers, Labor, Waste, Pain, Sarathkumar, Report
× RELATED சொல்லிட்டாங்க…