சென்னை: சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் கண்டிப்பாக ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம். இன்றைக்கு மக்கள் நலனுக்காக பல சட்டங்களை இயற்றி அதை ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம். 20ம் தேதி கூட கூட முதலமைச்சரின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தனர்.
அது மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்தது. ஆளுநரும் விரைவில் அதற்கான ஒப்புதலை தருவதற்கான நம்பிக்கையை தந்துள்ளார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி வேறு எந்த கட்சியும் கூட்டணிக்கு தலைமை வகிக்க முடியாது அதேபோன்று எங்கள் தலைமையிலான கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் தற்போதைய தமிழக முதல்வர் தான். இவ்வாறு அவர் கூறினார்.