×

புறநகருக்கு காரில் கஞ்சா கடத்தல் பிரபல ரவுடி உள்பட 3 பேர் சிக்கினர்: 2 கிலோ பறிமுதல்

ஆவடி: காரில் கஞ்சா கடத்திய பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, வில்லிவாக்கத்தில் இருந்து புறநகர் பகுதியான ஆவடிக்கு  அம்பத்தூர் வழியாக காரில் கஞ்சா கடத்துவதாக  அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, சண்முகபுரம் அய்யப்பன் கோயில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் வேகமாக வந்தது. இதனை பார்த்த போலீசார், அந்த காரை வழிமடக்கி சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் பிளாஸ்டிக் பையில் கஞ்சா பொட்டலங்கள்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு, போலீசார் காரில் இருந்த 2 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், காருடன் 3 வாலிபர்களை பிடித்து போலீசார் அம்பத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். அவர்கள் காரில்  கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது. விசாரணையில் அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி அப்பன்ராஜ் (36),. அதே பகுதியை சேர்ந்த முகமதுஅலி (19), முகப்பேர் மேற்கு, 14வது பிளாக்கை சார்ந்த மணிகண்டன் (25) என தெரியவந்தது. மேலும்,  இவர்கள் மூவரும் வில்லிவாக்கத்தை சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்பவரிடம் கஞ்சாவை வாங்கிவந்து ஆவடியில் விற்பனை செய்ததாக ஒப்புக் கொண்டனர். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதன் பிறகு, போலீசார் அவர்கள் மூவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஹேமந்த்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : suburbs , 3 arrested for smuggling cannabis in car to suburbs: 2 kg seized
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்