ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை ஊராட்சி கோட்டை குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் மாதவன் ( 60) விவசாயியான இவர் தினமும் காலை 6 மணியளவில் வீட்டில் இருந்து வயல் வெளி நோக்கி வாக்கிங் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 14 தேதி காலை விவசாயி மாதவன் வாக்கிங் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் மாதவனை இரும்பு ராடால் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதில் நிலை தடுமாறிய மாதவன் ரத்த காயத்துடன் தத்துத்தடுமாறி வீட்டிற்கு வந்து தன்னை 2 மர்ம நபர்கள் தாக்கி விட்டு தன் கையில் இருந்த செல்போன பறித்து சென்று விட்டதாக தெரிவித்தார்.
பின்னர் ரத்த காயத்துடன் வந்த மாதவனை அவரது உறவினர்கள் செங்குன்றம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது மாதவன் வழியிலேயே உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையிலும், திருத்தணி டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலும், மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி செந்தில், பெரியபாளையம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெயவேல் ஆகியோர் தலைமையிலும் தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை அழிஞ்சிவாக்கம் ஆற்றுப்பாலத்தின் மீது பெரியபாளையம் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 நபர்களை விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். மேலும் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர்கள் கடந்த 14 தேதி முதியவரை தாக்கி செல்போன் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் இருவரும் மாகரல் கிராமத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் ( 22) , மற்றும் இவரது தம்பி சந்தோஷ் (19) என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் கூறியதாவது, எங்கள் கிராமத்தை சேர்ந்த தனசேகர் (20) என்பவருடன் சேர்ந்து அழிஞ்சிவாக்கம் செல்லியம்மன் கோயில் உண்டியல் உடைத்து ரூ. 2 ஆயிரமும், திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் உண்டியல் உடைத்தோம் ஆனால் அதில் பணம் இல்லாததால் கோயிலில் இருந்த குத்து விளக்கை திருடினோம் என கூறினர். மேலும் போலீசார் அவர்களிடம் இருந்து மாதவனின் செல்போனை, பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.