மயிலாடுதுறை: சிறுமியின் நிர்வாண படத்தை வலைதளத்தில் வெளியிட்ட சென்னை வாலிபர் 4 மாதத்திற்கு முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போக்சோவில் கைது செய்ய சென்னை சென்ற போலீசார் இறப்பு சான்றிதழுடன் மயிலாடுதுறை திரும்பினர். மயிலாடுதுறை அருகே உள்ள தேரிழந்தூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயதான சிறுமி. இவர், சென்னையில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருடன் ஒன்றாகப் படித்துவந்த தோழியின் உறவினர் மெல்வின் செல்வக்குமார் (26). இவர் அந்த சிறுமியின் செல்போன் வாங்கி நட்புடன் பேசிவந்துள்ளார். இது, நாளடைவில் காதலாக மாறி உள்ளது. அதனால், இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி, தேரிழுந்தூரில் படிப்பைத்தொடர ஊருக்கு சென்றுவிட்டார். அதனால் மெல்வினுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். திடீரென ஒருநாள் தன் கையை கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்டச்சொட்ட வீடியோ எடுத்து அதை சிறுமிக்கு மெல்வின் அனுப்பியுள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி, தன்னை மேலாடை இல்லாமல் எடுத்து அனுப்பியுள்ளார். இதனிடையே, கடந்த வாரம் சிறுமி வீட்டிற்கு சென்ற உறவினர் ஒருவர், உன்னுடைய நிர்வாணப்படம் வலைதளங்களில் வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கடந்த 17ம்தேதி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மெல்வின் செல்வகுமாரை தேடி சென்னை சென்றனர். பின்னர் சேலையூர் பகுதியில் வீட்டை கண்டுபிடித்து விசாரணை நடத்தியதில், மெல்வின்செல்வக்குமார் கடந்த 4 மாதத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவரது இறப்பு சான்றிதழை பெற்றுக்கொண்டு போலீசார் மயிலாடுதுறை திரும்பினர்.