ஒரத்தநாடு: கூடுதலாக ஈரப்பதம் இருந்தாலும் நெல் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாட்டில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அலுவலர்களுக்கு அறிவுரை கூறி, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டி: இந்தாண்டு குறுவை சாகுபடி நடைபெற்றதையொட்டி கடந்த அக்டோபர் மாதம் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. கடந்த 21 நாட்களில் 65 லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 20 சதவீத அறுவடை பணிகள் மீதம் உள்ளதால் கூடுதலாக 25 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளோம். கூடுதலாக ஈரப்பதம் இருந்தாலும் கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.