மும்பை: பா.ஜ மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே. மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சியில் இருந்தபோது, இவர் அமைச்சராக பதவி வகித்தார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக சமீபத்தில் செய்திகள் வௌியாகின. இது பற்றி பா.ஜவை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் பதில் அளிக்க மறுத்து விட்டார். இந்நிலையில், பாஜ.வில் இருந்து விலகுவதாக கட்சே நேற்று அறிவித்தார். அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நாளை சேருகிறார். இதை மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவருமான ஜெயந்த் பாட்டீல் உறுதி செய்துள்ளார்.