×

கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை? : உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்

புதுடெல்லி: காற்று மாசு மற்றும் கடும் குளிரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என கலிபோர்னியா ஆராய்ச்சி பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. இதனால் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் உட்பட 4 மாநிலங்களில் விரைவில் கொரோனாவின் 2ம் அலை நிச்சயம் என்றும் இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் அச்சம் எழுந்துள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கடந்த டிசம்பர் முதல் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 4 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கையில், தற்போது அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 76 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளிர்காலத்தில் வைரஸ் தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கடந்த மாதமே எச்சரிக்கை விடுத்தது. கொரோனா வைரஸின் தன்மைகளை ஆய்வு செய்து, அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஆராய்ச்சி பல்கலைக்கழக பேராசிரியர் யானிங் ஜூ உள்ளிட்டவர்கள் உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பெரும்பாலான சூழ்நிலைகளில், நோய் கட்டுப்பாட்டு மையம்

பரிந்துரைத்துள்ள 6 அடி தனி மனித இடைவெளி என்ற தொலைவுக்கு அப்பாலும் சுவாச நீர்த்துளிகள் பயணிப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அது உறுதி செய்யப்பட்டும் விட்டது. மேலும் குளிர்  அதிகம் உள்ள சூழலில் நமது சுவாச நீர்த்துளிகள் தரையில் விழுவதற்கு முன்பாக 6 மீட்டருக்கு அதாவது 19.7 அடி அப்பாலும் பயணிக்கின்றன. ஏற்கனவே இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவுவதற்கும் இதுதான் காரணம்.இதனால் குளிர்காலத்தில் சுவாசத் துளிகள் மூலம் கொரோனா அதிகமாக பரவும் என்பதில் சந்தேகம் கிடையாது. அதே நேரத்தில் சூடான, வறண்ட இடங்களில் சுவாச நீர்த்துளிகள் எளிதில் ஆவியாகி விடுகின்றன. ஆவியாகும் நீர்த்துளிகள் பேசும்போதும், இருமும் போதும், தும்முகிற போதும் சுவாசத்தின் ஒரு பகுதியாக சிந்தப்படும் மற்ற தூசுப்படலம் மூலம் வந்த வைரஸ் துகள்களுடன் சேரும்.

இவை மிகச்சிறிய துகள்கள். பொதுவாக 10 மைக்ரான்களை காட்டிலும் சிறியவை. இவை காற்றில் பல மணி நேரம் இடை நிறுத்தப்படலாம். எனவே மக்கள் அந்த துகள்களை வெறுமனே சுவாசிப்பதன் மூலம் எடுத்துக் கொள்ள முடியும். மேலும் குளிர்காலத்தில் நீர்த்துளி தொடர்பு மிகவும் ஆபத்தானது என்பதால் இது உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான்.இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் இந்த வருடம் மைனஸ் டிகிரி அளவிற்கு குளிர் இருக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் டெல்லி ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு கடும் குளிர் ஏற்படும் என்றும், குளிர் காரணமாக அதனால் அதிகப்படியான உயிரிழப்புகள் இருக்கும் என கடந்த வாரம் வெளிப்படையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதனால் குளிரால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க டெல்லி முழுவதும் சாலை ஓரங்களில் எத்தனை பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் இப்போதே கண்காணிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று, அதிகப்படியான மாசால் தரமற்ற சுவாசக் காற்று டெல்லியில் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதை தாண்டி தற்போது கடுமையான குளிர், அதனால் கொரோனாவின் 2ம் அலை ஏற்படும் என்ற அச்சத்தில் தற்போது தலைநகர் மக்கள் உள்ளனர்.ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கு, இந்த குளிர்காலத்தில் கொரோனாவின் 2ம் அலை என்பது கூடுதல் சவால்தான் என்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய ஆராய்ச்சியாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags : states ,spread ,Delhi ,fatalities , Severe cold, corona, fast, Delhi, fatalities, danger
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...