×

‘‘தென்காசியில் இருந்து சென்னை வந்து ஏமாந்தார்’’ பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி ரூ.3லட்சத்துடன் சாமியார் ஓட்டம் : வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: பில்லி, சூனியம் எடுப்பதாக 3 லட்ச ரூபாயுடன் தப்பிவிட்ட சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா, மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன் (45). இவர் சொந்தமாக மினி வேன் வைத்து, வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் சில நாட்களுக்கு முன் தனது பகுதியில் ஒரு சாமியாரை சந்தித்தபோது தனது குடும்பத்தில் அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதற்கு அந்த சாமியார், ‘’உனது குடும்பத்துக்கு யாரோ பில்லி, சூனியம் வைத்திருக்கின்றனர். அவற்றை எடுக்க, நீ சென்னைக்கு ₹2 லட்சம், 2 கோழி எடுத்துக்கொண்டு வா. அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்துவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதன்படி ராஜகுமாரன், தனது மினி வேனை ₹5 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டு அதில் ₹2 லட்சத்தை எடுத்துக்கொண்டு, உறவினர் ஒருவருடன் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை பகுதிக்கு வந்திருக்கிறார். அங்கிருந்து அவர் சாமியாரை தொடர்பு கொண்டதும் சாமியார் வந்துள்ளார். பின்னர் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு  ₹2 லட்சம் மற்றும் 2 கோழிகளை பெற்றுக்கொண்டார். இதன்பிறகு பூஜை பொருட்களை வாங்கி வருவதாக சென்ற சாமியார் திரும்ப வரவில்லை. பல நேரம் காத்திருந்துவிட்டு அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது சுவீட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ராஜகுமாரன் அளித்த புகாரின்படி, வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பில்லி, சூனியம் எடுப்பதாக அந்த சாமியார் ₹1 லட்சம் ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் அந்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் சாமியாரின் உருவம் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.


Tags : Tenkasi ,Chennai ,Billy ,Rs , ‘‘ In Tenkasi, Chennai, Emandar, voodoo, sorcery
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...