மதுரை : முரளிதரன் கூறியதால் விஜய் சேதுபதி ‘800’ படத்திலிருந்து விலகியுள்ளார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. எனவே விரைவில் தியேட்டர்கள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.
இதை தொடர்ந்து , 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, முத்தையா முரளிதரனே படத்திலிருந்து விலகி விடுங்கள் என்று கூறிவிட்டதால் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகியுள்ளார் . இது முடிந்த விஷயம். அதை பேச வேண்டாம் என்று கூறினார். மேலும் விஜய்சேதுபதி மகள் பற்றி ஆபாசமாக பதிவிட்டவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய்சேதுபதி மகள் மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கு பாதிப்பு என்றாலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்த கடம்பூர் ராஜு , “‘800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வை புரிந்து செயல்பட்டால் விஜய்சேதுபதி எதிர்காலத்திற்கு நல்லது.அதனால் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி, அவர் யோசித்து பார்க்க வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.