டெல்லி : இந்திய குடிமக்களுக்கு உதவும் காவலர்களின் விடாமுயற்சி, தயார்நிலை குறித்து தாம் பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று வீர வணக்கநாளை யொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. உயிர்நீத்த போலீசாருக்கு அந்தந்த பகுதி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், காவலர் வீரவணக்க நாள் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,இந்தியா முழுவதும் உள்ள எங்கள் காவல்துறையினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடமையின் வரிசையில் தியாகம் செய்த அனைத்து காவல்துறையினருக்கும் நாங்கள் அனைவரும் மரியாதை செலுத்துகிறோம்.அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நினைவில் இருக்கும். சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது முதல் கொடூரமான குற்றங்களைத் தீர்ப்பது வரையிலும், பேரழிவு காலக்கட்டத்தில் உதவி செய்வதிலிருந்து, கோவிட் -19 உடன் போராடுவது வரை எங்கள் காவல்துறையினர் எப்போதும் தயக்கமின்றி சிறப்பாக செயல்படுகின்றனர். இந்திய குடிமக்களுக்கு உதவ அவர்களின் விடாமுயற்சி மற்றும் தயார்நிலை குறித்து பெருமிதம் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.