×

செல்போனை தாய் பறித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை: சடலத்தை அடக்கம் செய்ய முயற்சி

ஆவடி:  ஆவடி அடுத்த கொள்ளுமேடு சிவசக்தி நகரை சேர்ந்தவர் அருள் அந்தோணி. இவரது மனைவி பவுலின். இவர்களது மகன்  டேனியல்  ஜோசப்(17). இவன், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அரசு ஐடிஐயில் 2ம் ஆண்டு படித்து வந்தான்.  நேற்று முன்தினம் இரவு டேனியல்  செல்போனில் வெகுநேரமாக கேம் விளையாடி கொண்டிருந்தான். இதனையடுத்து, அவனை தாய் பவுலின்  கண்டித்து செல்போனை பறித்துள்ளார்.
இதன் பிறகு, டேனியல் பிரியாணி கேட்டதால், அதனை வாங்க பவுலின் கடைக்கு சென்றுவிட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்  பிரியாணியுடன் வீடு திரும்பினார். அப்போது, அங்கு படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் டேனியல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.  இதனை பார்த்த பவுலின் அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

மேலும், இதுகுறித்து அருள் அந்தோணிக்கு தகவல் கொடுத்தார். பின்னர், அவர் விரைந்து வந்து மகனின் சடலத்தை இறக்கி வீட்டில் வைத்துள்ளார்.  பின்னர், தம்பதியினர் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் மகன் டேனியல் சடலத்தை அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து,  நேற்று அக்கம் பக்கத்தினர் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். பின்னர், எஸ்.ஐ.சிவகுமார் தலைமையில், போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், வீட்டில் வைத்திருந்த  சிறுவனின் சடலத்தை கைப்பற்ற முயன்றனர். அப்போது, உறவினர்கள்  சடலத்தை கொடுக்க மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி சடலத்தை  கைப்பற்றினர். பின்னர், போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



Tags : suicide , Boy commits suicide after mother snatches cellphone: Attempt to bury corpse
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை