தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதியில் சாலையில் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நகை, பணத்தை நூதன முறையில் அபேஸ் செய்து வந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, புதுகிராமம் பகுதியை சேர்ந்த ராணி (38), திலகா (27), ராஜாமணி (40), மரியா (30), லட்சுமி (40), இசக்கியம்மாள் (27), உஷா (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் வடசென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, பலரிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதேபோல், பஸ்களில் பெண் பயணிகளிடமும் பணம், நகை பறித்தது தெரியவந்தது.
திருடிய பணம், நகையுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டு ஒரு மாதம் கழித்து மீண்டும் சென்னைக்கு வந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்களிடமிருந்து 40 சவரன் நகைகள், 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.