சென்னை: ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017ம் ஆண்டு முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து, வேதா நிலையம் இல்லத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றையும் தமிழக அரசு பிறப்பித்தது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் லஷ்மி நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி என்ற முறையில் 24,322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையம் இல்லத்துக்கு ரூ.67 கோடியே 90 லட்சத்து 52,033 என இழப்பீடு நிர்ணயித்து உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த தொகையை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தல் அதிகாரியின் இழப்பீட்டு உத்தரவை மனுவாக செப்டம்பர் 1ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிட்டி சிவில் நீதிமன்றம், இழப்பீட்டு தொகையை பெறுவது தொடர்பாக செப்டம்பர் 24ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி ரூ.36 கோடியே 87 லட்சத்து 23,462 வழங்கும்படி வருமான வரித்துறை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் (மெமோ) செய்தது.
இந்த மனு அக்டோபர் 14ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை மனு குறித்து தீபா, தீபக் மற்றும் நிலம் கையகப்படுத்தல் அதிகாரி ஆகியோர் நவம்பர் 5ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.