சென்னை: கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான தேர்வில் தற்காலிக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிக்கான கால்நடை உதவி மருத்துவர் பதவியில்(2019-2020ம் ஆண்டுக்கானது) காலியாக உள்ள 1141 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி 23ம் தேதி நடந்தது.
இந்த தேர்வில் 2015 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் விண்ணப்பத்தாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக 1,942 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.