திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று இரவு தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை அனுமந்த வாகனத்தில் எழுந்தருள உள்ளார். ்திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 16ம் தேதி இரவு தொடங்கியது. 4ம் நாளான நேற்று முன்தினம் இரவு சர்வ பூபால வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி, நாச்சியார் கோலத்தில் (மோகினி அலங்காரம்) அருள்பாலித்தார். நாச்சியார் திருக்கோலத்தின் அழகை ரசித்தபடி, கிருஷ்ணர் பல்லக்கில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அர்ச்சகர்கள் மற்றும் ஜீயர்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். பிரமோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.