சென்னை: பணியின் போது உயிர் நீத்த 151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டுகளை டிஜிபி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். 1962ம் ஆண்டு இந்திய சீன போரின் போது உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி தமிழக காவல் துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக நேற்று சென்னையில் உள்ள தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணியின் போது உயிர்நீத்த 151 காவர்களை போற்றும் வகையில் அவர்களின் உருவம் பொறித்த கல்வெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், மரக்கன்று ஒன்றையும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நட்டனர்.
முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்த போது, அவரை வரவேற்கும் விதமாக காவலர்களின் பேன்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார் மற்றும் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர் தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.