ஜார்கண்ட்: ராஞ்சி -ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில், சட்டவிரோதமாக மாடு கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டிய போலீசார், அவற்றை திருடிச் சென்றனர். இதையடுத்து, 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக ஜார்கண்ட் போலீசார் 32 மாடுகளை கடத்திச் ெசன்ற லாரியை கைப்பற்றியது. இவற்றை, பசு காப்பகத்தில் கொண்டு செல்வதற்கான பொறுப்பை சில போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள், ராம்கரில் இருந்து கிழக்கு சிங்பூமில் உள்ள காட்ஷிலாவுக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், இந்த போலீசார் தாங்கள் சென்ற லாரியை நிறுத்தி, அங்கிருந்து மற்றொரு தனியார் வாகனத்தில் ஐந்து மாடுகளை ஏற்றினர்.
இந்த தகவல் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு சென்றது. அதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் 5 போலீசாரையும் கையும் களவுமாக பிடித்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர், 5 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்ட் செய்தனர். இதுகுறித்து, வடக்கு சோட்டானக்பூர் டிஐஜி ஏ.வி.ஹோம்கர் கூறுகையில், ‘ராஜரப்பா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 5 போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.