×

மூதாட்டிகளை குறிவைத்து வடசென்னையில் கைவரிசை காட்டிய 7 பெண்கள் கைது; 40 பவுன் பறிமுதல்: வீடு வாடகைக்கு எடுத்து அட்டூழியம்

தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதியில் மூதாட்டிகளை குறித்து நகை, பணம் பறிப்பதாக சென்னை மாநகர கமிஷனருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஜுலியட் ஜீசர் தலைமையில் தனிப்படை அமைத்து தண்டையார்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், வில்லிவாக்கம், எழும்பூர், பேசின்பிரிட்ஜ், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 4 பெண்களை பிடித்து விசாரித்தனர்.

முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, புதுகிராமம் பகுதியை சேர்ந்த ராணி (38), திலகா (27), ராஜாமணி (40), மரியா (30) என்பதும் மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தீபாவளி பண்டிகை காலங்களில் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து ஒவ்வொரு பகுதியாக சென்று நோட்டமிட்டு, புத்தாடை, நகை வாங்க செல்லும் பெண்கள், மூதாட்டிகளிடம் நைசாக பேசி நகை, பணம் பறித்து வந்துள்ளனர்.

இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கொருக்குப்பேட்டையில் சுற்றிய அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (40), இசக்கியம்மாள் (27), உஷா (34) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இவர்கள் 3 பேரும் நேற்று கொருக்குப்பேட்டை பகுதியில் தனியாக நடந்து சென்ற கொருக்குப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த குப்பம்மா (70) என்பவரிடம் நூதன முறையில் 3 பவுன் நகை, 10 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 7 பெண்கள் மீதும் திருவொற்றியூர், பூக்கடை, எழும்பூர், ஆர்.கே.நகர், வில்லிவாக்கம், எஸ்பிளனேடு, பேசின்பிரிட்ஜ், புது வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

மேலும் பஸ்களில் பயணம் செய்வதுபோல் பெண் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி பணம், நகை பறித்துள்ளனர். வடசென்னையில் ஒரு மாதத்துக்கு ஒரு பகுதியை தேர்வு செய்து நூதன முறையில் நகை, பணத்தை திருடி வந்துள்ளனர். திருடிய பணம், நகையுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டு ஒரு மாதம் கழித்து மீண்டும் சென்னைக்கு வந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 40 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : women ,grandmothers ,house ,North Chennai , Grandmother, North Chennai, handcuffed, 7 women, arrested
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது