×

திருவில்லிபுத்தூர் அருகே விஷம் வைத்து மயில்கள் கொலை? விவசாயியிடம் விசாரணை

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே 3 மயில்கள் இறந்து கிடந்த சம்பவத்தில் விவசாயியை பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள சூடிபுதூர் பகுதியில் மயில்கள் இறந்து கிடப்பதாக திருவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் சுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள விவசாய நிலம் அருகே மூன்று பெண் மயில்கள் இறந்து கிடந்தன.

அதே பகுதியை சேர்ந்த விவசாயி கருப்பையா(57) என்பவர் தனது வயலில் மக்காச்சோளத்தை மயில்கள் சேதப்படுத்தியதால் அரிசியில் குருணை மருந்து கலந்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்டதாலேயே மூன்று மயில்களும் இறந்ததாக தெரிகிறது. எனவே வனத்துறையினர் கருப்பையாவை பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த 3 பெண் மயில்களை கால்நடை மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

Tags : Srivilliputhur , thiruvilliputhur, Peacocks, Murder
× RELATED பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு...