சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். 800 படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியான சில நாட்களில் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இயக்குநர் சீனுராமி, பாரதிராஜா, கவிஞர்கள் தாமரை, வைரமுத்து , சீமான், திருமுருகன் காந்தி என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும் முத்தையா முரளிதரன் பயோபிக் படமான 800 இல் தொடர்ந்து நடிக்கிறேனா ? இல்லையா? என்பதை விஜய் சேதுபதி அறிவிக்காமல் இருந்தார். பின்னர் அப்படத்திலிருந்து பின்வாங்குவதாக அறிவித்தார்.
இதனிடையே விஜய் சேதுபதி மகளுக்கு நெட்டிசன் ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்தார். கொச்சையான வார்த்தைகளால் ரித்திக் என்ற பெயரில் வெளியான அந்த பதிவை கண்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவரின் ட்விட்டர் கணக்கும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்று அவரின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடப்பட்டது. இதை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த இளைஞரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.