திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கொரானாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக மக்களிடமிருந்து மனுக்களுக்கு மட்டும் பெட்டி வைத்தும் மற்றும் வாட்ஸ்அப் மூலமும் பெறப்படுகிறது. அந்தவகையில் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் நேற்று வாட்ஸ்அப் மூலம் வந்தது. தவிர மனுப்பெட்டியிலும் மக்கள் மனு அளித்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் புதியவன் அளித்த மனுவில், ‘அடிமைச் சங்கிலியை உடைத்து சமூகநீதியை நிலைநாட்டிய தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் ஆகியோரது சிலைகளை கூண்டுக்கம்பிக்குள் அடைத்து வைத்துள்ள அவர்களை போற்றும் அதிமுக அரசு, அதை விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பாமக மாவட்ட செயலாளர் திலீப்குமார் அளித்த மனுவில், ‘திருச்சி மாநகர போலீசார் நாள்ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இலக்கு வைத்து, ஆட்டோ, கார், டூவீலர்களை நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டும் வழக்குப்பதிவு செய்கின்றனர். மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீளாத நிலையில் இதுபோன்ற வழக்குகள் தேவையற்றது. இதை தவிர்க்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். கம்பரசம்பேட்டை மல்லாச்சிபுரத்தில் சிறிய சுரங்கப் பாதை அமைத்து பள்ளி வாகனம், ஆம்புலன்ஸ் செல்ல பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.
ஆட்டோ டிரைவருக்கு ஹெல்மெட் கேஸ்..!
திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி தில்லைநகர் வரை சவாரி சென்று திரும்பினார். அவரது செல்போனுக்கு மாநகர போலீசாரிடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதை பார்த்த விஜயகுமார், அதிர்ச்சியடைந்தார். ஹெல்மெட் போடாமல் சென்றதற்கு அபராதம் விதித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து விஜயகுமார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். விஜயகுமார் ஹெல்மெட் அணிந்தபடி ஆட்டோ ஓட்டி வந்தார்.