×

புதிய வேளாண் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் கடும் எதிர்ப்பு.. தென் மாநில விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என ஆய்வில் தகவல்!!

டெல்லி : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை 50%த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது, விளை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு 3 புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த சட்டங்களை 50%த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

16 மாநிலங்களில் எடுக்கப்பட்ட புதிய ஆய்வின் படி, 35% மக்களே சட்டங்களை வரவேற்று உள்ளனர். புதிய சட்டங்களால் மண்டி முறை முடிவுக்கு வரும் என்றும் குறைந்தபட்ச ஆதார் விலை கிடைக்காது என்றும் 40% விவசாயிகளும் அச்சம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் தனியார் நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களுமே பலன் அடைவார்கள் என்று பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 3ம் தேதியில் இருந்து 9ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பஞ்சாப், ஹரியானா மற்றும் ஹிமாச்சல பிரதேச விவசாயிகள் மிக கடுமையாக எதிர்த்துள்ளனர்.

அசாம், மேற்கு வங்கம், ஒடிசா, சட்டீஸ்கர் மாநில விவசாயிகளும் சட்டங்கள் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். விரைவில் தேர்தல் நடைபெற உள்ள பீகார் விவசாயிகளும் மத்திய அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில், தென் மாநிலங்களில் இந்த சட்டம் குறித்து விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags : Agricultural laws, farmers, resistance
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...