×

சிறையில் இருந்து விடுதலை எப்போது? பெங்களூருவில் இருந்து சசிகலா பரபரப்பு கடிதம்

சென்னை: தனது விடுதலை குறித்து பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா தெரிவித்த தகவல்கள் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் விரைவில் வெளியே வருவார் என்ற ெசய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ₹10 கோடி அபராதத்தொகையை அவர் இன்னும் செலுத்தவில்லை. இந்நிலையில், சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாங்கள் நலமாக இருக்கிறோம். கோவிட் காரணமாக தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையளிக்கிறது.

கோவிட் நோய் தொற்றுப் பரவலினால் தமிழகத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதும் எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் தமிழக மக்களும், பிற மாநில மக்களும் கோவிட் நோய் தொற்றிலிருந்து முற்றிலுமாக மீண்டு சகஜ நிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டி வருகிறேன். கோவிட் காரணமாக 2020 மார்ச் மூன்றாம் வாரத்திலிருந்து, ‘நேர் காணல்’களை கர்நாடக சிறைத் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எப்போது நேர் காணல் அனுமதி அளிக்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. சிறைத்துறை எனது நன்னடத்தை தண்டனை குறைப்பு (ரெமிஷன்) விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

உத்தரவு கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன். அதன்படி அபராதத்தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும்.  கர்நாடக நீதிமன்றத்தில் அபராதத்தொகையை கட்டிய பிறகு உச்ச நீதிமன்றத்தில் 2017 தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக தீர்ப்பு நகலில் திருத்தங்கள் தொடர்பான மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வக்கீல்களிடம் உறுதி செய்யவும். அதுபற்றி டிடிவி தினகரனிடம் ஆலோசித்து செயல்படவும்” என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் நன்னடத்தையை காரணம் காட்டி விரைவில் வெளியில் வருவதற்கான நடவடிக்கைகளில் சசிகலா ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.



Tags : prison ,Sasikala ,Bangalore , When will you be released from prison? Sasikala sensational letter from Bangalore
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்