திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் 100 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினர். அப்போது சிவசங்கர் கொடுத்த வாக்குமூலம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது: ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் சட்டத்துக்கு புறப்பான காரியங்களில் ஈடுபட்டு வந்ததாக சொப்னா என்னிடம் கூறினார். பல அதிகாரிகள் துபாயில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அழகுசாதன பொருட்களை தூதரகத்துக்கு கொண்டுவந்து திருவனந்தபுரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். மேலும் பல சட்டவிரோத செயல்களை செய்து வந்தனர்.
இதுபோன்ற செயல்களுக்கு ‘கவுன்சல் ஈஸ் ஈட்டிங் மேங்கோஸ்’ என்ற சைகை வாக்கியத்தை பயன்படுத்தினர். ஜூலை 2ம் தேதி சொப்னா என்னை சந்தித்தார். அப்போது விமான நிலையத்தில் சுங்க இலாகாவிடம் ஒரு பார்சல் சிக்கி இருப்பதாகவும், அதை விடுவிக்க உதவி கமிஷனரிடம் அழைத்து பேச வேண்டும் எனவும் கூறினார். ஆனால் நான் யாரையும் அழைக்கவில்லை. தங்கம் பிடிபட்ட ஜூலை 4ம் தேதி இரவு, நான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சொப்னா தனது கணவருடன் வந்திருந்தார். 4வது மாடியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருப்பதாக கூறினார். இவ்வாறு சிவசங்கர் தெரிவித்துள்ளார். தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகள்தான் தங்க கடத்தலில் ஈடுபட்டனர் என்று கூறி சொப்னா வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறாரா? என்று அதிகாரிகள் சிவசங்கரிடம் கேட்டபோது, அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
* கைது செய்ய தடை
சுங்க இலாகா அதிகாரிகள் சிவசங்கரை கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் 23ம் தேதிவரை சிவசங்கரை கைது செய்ய தடை விதித்தது. மேலும் வழக்கு விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.