×

காரைக்குடியில் 10 பைசாவுக்கு ‘கட்டிங்’ : சலூன்கடையில் நூதன அறிவிப்பு

காரைக்குடி: காரைக்குடியில் 10 பைசாவுக்கு முடி வெட்டிக் கொள்ளலாம் என சலூன் கடையில் நூதன அறிவிப்பு வெளியிட்டதால் மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் வாடிக்கையாளர்களை கவர 5 பைசா, 10 பைசாவிற்கு ஓட்டல்களில் பிரியாணி விற்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த வரிசையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த சலூன் கடை ஒன்றும் இணைந்துள்ளது. கடையின் திறப்புவிழாவை முன்னிட்டு நேற்று ஒருநாள் மட்டும் 10 பைசாவுக்கு முடி வெட்டிக்கொள்ளலாம் என நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதனால் ஆச்சர்யமடைந்த பொதுமக்கள் நேற்று அதிகளவில் கடை முன்பு குவிந்தனர். 10 பைசாவை கொடுத்து ஆர்வத்துடன் முடி வெட்டிக் கொண்டனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில், ‘‘முன்பு 10 பைசாவுக்கு பொருள் வாங்கலாம். தற்போது எவ்வளவு பணம் இருந்தாலும் போதவில்லை. பணத்தின் அருமை தற்போது உள்ள இளைய தலைமுறைக்கு தெரிய வேண்டும். முன்பு புழக்கத்தில் இருந்த காசுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த அறிவிப்பை வெளியிட்டோம். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. காலை முதல் காசுடன் ஏராளமானோர் வந்தனர். சமூக இடைவெளியுடன் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரத்துக்கு வரச் சொல்லி முடி வெட்டினோம்’’ என்றார்.

Tags : salon ,Karaikudi ,announcement , Karaikudi, saloon shop
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்