×

மத்திய பிரதேசத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் விவசாயி மரணம் : இறப்பையும் பொருட்படுத்தாமல் கூட்டத்தை தொடர்ந்த பாஜக!!

போபால் : மத்திய பிரதேசத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததையும் பொருட்படுத்தாமல் அக்கட்சியினர் கூட்டத்தை நடத்தி முடித்தது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.   

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள முண்டியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ராஜ்ய சபா எம்.பி. ஜோதிராதித்யா சிந்தியா தலைமை தாங்கினார். அப்போது கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த 70 வயதான விவசாயி ஜீவன் சிங் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஜீவன் சிங் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜீவன் சிங்கின் இந்த திடீர் மரணம் பாஜகவுக்கு எதிரான குற்றச்சாட்டாக மாறியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் அருண் யாதவ், விவசாயி இறந்த பின்பும் பாஜக தலைவர்கள் அக்கூட்டத்தை தொடர்ந்து நடத்தி உரையாற்றினர். இதுதான் பாஜகவின் மனநிலையும் மனிதநேயமும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இருப்பினும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் கோவிந்த் மாலு, விவசாயியின் இறப்பு செய்தியை அறிந்ததும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர் என்று விளக்கமளித்துள்ளார்.

Tags : Farmer death ,BJP ,meeting ,death ,Madhya Pradesh , Madhya Pradesh m, farmer,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...