கும்பகோணம்,:மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது என்று அதிமுக துணை ஒருஙகிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகரும் நியாய விலைக்கடை துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக துணை ஒருஙகிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது : தஞ்சை மாவட்டத்தில் இன்று 147 நகரும் நியாயவிலை கடைகள் துவக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இடஒதுக்கீடு சம்பந்தமாக கவர்னரின் ஒப்புதலுக்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நெல்கொள முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்வதாக இருந்ததால் நெல்கொள்முதல் திறக்கப்படும். தேங்கிய உள்ள நெல் மூட்டைகளை கொள்முதலுக்கு துரிதமாக எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கினால் தவறு. அவ்வாறு வாங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘இந்த கருத்தை பற்றி எனக்கு தெரியாது. இந்த எண்ணம் எனக்கும் கிடையாது. மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து அதிமுக முடிவு எடுக்கவில்லை’’ என்றார்.