அசாம்: அசாம்-மிசோரம் மாநில எல்லையில் கிராமங்கள் இடையே நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர மோதலால் ஏற்பட்ட பதற்றம் இரு மாநில முதல்வர்களின் நடவடிக்கையால் முடிவுக்கு வந்துள்ளது. அசாம்-மிசோரம் மாநிலங்களுக்கு இடையே ஏற்கனவே எல்லை பிரச்சனை நீடிக்கும் நிலையில், அசாம் சொந்தம் கொண்டாடும் இடத்தில் மிசோரம் கொரோனா பரிசோதனை மையத்தை அமைத்தது.
இதனையடுத்து இரு மாநில எல்லை கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது. நேற்று அசாமின் சஞ்சார் மாவட்டம் மற்றும் மிசோரமின் குலாசி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் மோதலாக உருவெடுத்தது. கற்களாலும், தடிகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட கிராமத்தினர், குடிசைகளை தீ வைத்து கொளுத்தியதால் பெரும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து, இரு மாநில எல்லையிலும் மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் மிசோரம் முதல்வர் சோரம்தாங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இரு அரசுகளும் எடுத்த தீவிர நடவடிக்கைகளை அடுத்து அசாம்-மிசோரம் மாநில எல்லையில் பதற்றம் குறைந்துள்ளது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.