திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க புதிய செயலியை எஸ்.பி அரவிந்தன் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் அன்னிய நபர்கள் மற்றும் ஏற்கனவே குற்றச்செயல் புரிந்த நபர்களின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் காவல் துறையினர் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது சந்தேகப்படும் படியான நபர்களை படம் பிடித்து அவர்களின் புகைப்படத்தை முகம் அடையாளம் காணும் புதிய செயலியில் ஒப்பிடும்போது ஏற்கனவே குற்றம் புரிந்த நபரின் முக அவயங்களுடன் ஒப்பிட்டு பார்த்து குற்றம் புரிந்தவரை அடையாளம் காணப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவி புரியும் வகையில் செயல்படும் புதிய செயலியை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அரவிந்தன் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 80 ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களின் செல்போனில் இந்த செயலி நிறுவப்படும். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநில குற்றவாளிகளின் விவரத்தையும் இந்த செயலி மூலம் கண்டறியும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. 2012 முதல் மாநில குற்ற ஆவண காப்பகம் மூலம் தகவல்கள் பெறப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 800 குற்றவாளிகள் விவரத்துடன் மொத்தம் 60 ஆயிரம் குற்றவாளிகளின் விவரங்கள் இருப்பதால் பழைய குற்றவாளிகளை எளிதில் கண்டறிய இந்த செயலி உபயோகமாக இருக்கும். அதற்கான பயிற்சியை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகிறது என்று மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் தெரிவித்தார்.